Sunday, December 12, 2010

நண்பனின் கடிதங்கள்

கடிதம் - 3

உத்தமபாளையம்


அன்புள்ள சரவணனுக்கு,

நலம், நலமே விளைக! நலமே விழைக!

உன் வாழ்த்து அட்டை கிடைத்தது. மிகவும் மகிழ்ந்தேன். மிகவும் ரசித்தேன்.

நீ தீபாவளி எப்படிக் கொண்டாடினாய்? தீபாவளியன்று உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.  இந்த முறை தீபாவளி பழைய உற்சாகத்துடன் இல்லை. பால்ய காலத்து நினைவுகளில்தான் கொஞ்சம் குளிர் காய்ந்து கொண்டேன். பெரும்பாலான நண்பர்களால் ஊருக்கு வர முடியவில்லை.  மேலும், கலவரங்களால் சகஜ வாழ்க்கை அக்கம் பக்கத்துக்கு கிராமங்களில் பெரிதும் பாதிக்கபட்டிருந்ததால் தீபாவளியே சோபையிழந்து கிடந்தது. எனது பிறந்த தினத்தைப் போலவே தீபாவளியையும் எளிமையாக, மிக அமைதியான முறையில் கொண்டாடினேன்.  எனது நெருக்கமான நண்பர்களான பகவதிமுத்துவும், ஜெகனும் என் அருகில் இருந்தது சற்று உற்சாகம் ஊட்டியது.  உனது சேய்மை கொஞ்சம் உறுத்தியது உண்மை.

இங்கு தற்போது நிலவும் காலநிலை. நண்பா! நான் இதில் உன்னை விடுத்துச் சுகம் சுகிக்கும் சுயநலமி ஆகிவிட்டேன். கடந்த பருவநிலையில் பெய்த பெருமழை போய், தற்போது மேகங்கள் கவிந்து மோடம் போட்டு திடீரென்று, "சிரித்துப் போன கீதாவாய்" 'சடசடத்து', கையில் பிடிக்குமுன் காணாமல் போகும் சிறுமழையுடன். எனினும் தோழா! எனைப் புரிந்து கொண்டு சுகமூட்டும் உன் சேய்மையில் மனம் வலிப்பது நிஜம். இதே கால நிலை. அடுத்த மாதமே மாறும் என்பது எனக்குத் தெரியும். சூரியனை நாடுகடத்தி குளிரும் மார்கழிப் பணியில் மௌனம் சாதிக்கும் என் இரவுகள் இனிதான் வரவிருக்கின்றன.

சரி சரி! நீ எப்படிப் படித்துக் கொண்டிருக்கிறாய்? நண்பர் ஹரி, எப்படி இருக்கிறார்? மற்றும் நம் பிற நண்பர்கள் எப்படி இருக்கிறார்கள்? எல்லாம் எழுது. உடனடியாக எழுது.

சரவணா! தற்போது என்னிடம் நல்லதாக நான்கு ஆய்வுக்கட்டுரைகள் - புத்தங்கங்கள் இருக்கின்றன. அதைதான் தற்போது படித்துக் கொண்டிருக்கிறேன்.  முதல் புத்தகம் க.நா.சு. எழுதியது.

எங்களது 'பட்டமளிப்பு விழ' என்றைக்கு நடக்கவுள்ளது என்பது பற்றிய சரியான விபரம் தெரிந்தால் எழுது.

செல்வி. விஜயலட்சுமி அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களுக்கு என் அன்பைத் தெரிவி.  தம்பி எப்படி படிக்கிறான்? அவனையும் கேட்டதாகச் சொல். ________ என்ன ஆயிற்று என எனக்கே தெரியவில்லை. .....................

சரி விடு.  நீ என்னென்ன சினிமா பார்த்தாய்? எதாவது நல்ல படம்? தீபாவளியன்று அழியாத கோலங்கள் பார்த்திருப்பாய் என நம்புகிறேன். ரொம்ப top இல்ல? இன்றைக்கு வெற்றிகரமாக 6 - வது தடவையாக 'அபூர்வ சகோதரர்கள்' பார்த்தேன். இன்னும் 4 - தடவை (குறைந்தது) பார்ப்பேன். இந்தத் தியேட்டர்களில் படம் பார்பதே தேவசுகம். 'சோலைக்குயில்' பார்த்தேன்.

மற்றபடி இங்கு சொல்லத்தக்க விஷயங்கள் ஏதுமில்லை.

கொஞ்சம் சீக்கிரம் பதில் போடு.

அன்புடன்,
ரமேஷ் சண்முகம்


மனித மரம்


விழுது போட்டு,
அடிமரம் நீங்க  யத்தனிக்க,
அடி நழுவிப் போகும்.
அந்தரத்தில் கைவீசும்
விழுது.
அரிக்கப்பட்ட அடிமரம்
காற்று நினைந்து
கவலையுறும்.
உள்ளுள் கிளை ஒன்று
தளிர்விட்டு
புது விழுது பரப்பப்
புறப்பட்டு போகும் -
- அடியின் நித்தியம்
  தெரியாது.

Pandit Venkatesh Kumar and Raag Hameer