Sunday, August 29, 2010

Vidiyum Kaalai

Vidiyal

Un Kavidhai

Udalai Piriyum Suvadugal

Thedal Niyathigal

Status

Tharkolai

Known secret

Dreamy Girl - 3

Dreamy Girl - 2

Dreamy Girl - 1

Convulsion

Baby

Gnaasnaanam

Infection

Nirvaanam - 2

Nirvaanam

Rasanai Vilimbugal

Manitha Unavugal

Iravu Prathignaikal

Kadaitheru Sarakku

Shruthi sangamam

Irul

Narthaki

Following are few Indian ink sketches I made for my Poem Manuscript, during the college days titled - "Rasanai Vilimbugal'.

Me at the Age of 3

My Family Photo - 1971

This is the photo taken in a Madurai Studio. Left extreme is my late sister Uma Maheswari. Next to her is my mother Jeyalakshmi and my father Balasubramanian. Next to him are my uncles. Right extreme is me, at the age of 3.

நண்பனின் கடிதங்கள்

கடிதம் - 2

உத்தமபாளையம்
17 /08 /89

பேரன்புள்ள நண்பா,

நலம், நலமறிய ஆவல்.

மிக்க அவசரத்தில் வந்ததால் உன்னிடம் சொல்லிக் கொள்ள முடியவில்லை. உன்னை பலதடவை இவ்வாறே வருத்த நேர்ந்ததற்கு மிகவும் வருந்துகிறேன்.

நான் இங்கு திங்கட் கிழமை காலை வந்தேன். மிகவும் தட்பமான சூழ்நிலை. நம் மனப் போக்கையும் விஞ்சும் வண்ணம் வினாடிக்கு விநாடி மனதை மாற்றி, தூறலாய் புன்னகைத்தும், மழையாய் காமம் காட்டியும் காதல் செய்யும் பூமிக்கும் வானத்திற்கும் நடுவே, கள்ளங்கபடமற்ற மக்களுடனும், கால்நடைகளுடனும், கால்வாயுடனும்.



என் சொந்த தேசத்தில் ஒரு விருந்தினனாய், ஒரு பூ மௌன அமைதியுடனும், சுகத்துடனும் காலத்தை களித்து கழித்துக் கொண்டிருக்கிறேன்.

இன்று மதியத்தில் அருகிலிருந்த சுருளி அருவிக்குச் சென்றிருந்தோம். அதன் பெருமையை என்னென்று சொல்ல. மென்மையான தூறலின் போது அருவியில் குளிப்பதென்பது தேவ சுகம் நண்பா! அந்த நீரின் வேகத்தை எதிர்த்து பலம் காத்தும் போதும், தோற்றுத் துவண்டு வெளிவரும் போதும், வந்த பின் அருகில் மென்மையாய் விழுந்து கொண்டிருக்கும் சின்ன வீழ்ச்சியின் மௌனத் தடவலில் மயங்கி நிற்பதும்...

என் மனத் தேவைகளை உடம்பு தீர்த்துக் கொண்டு கர்வப்படுகிறதே! இவையனைத்தும் என் சொந்த தேசத்து சொர்க்கங்கள் எனத் தெரிய வரும்போது... சரவணா! நான் மிக்க தலைக்கனம் பிடித்தவனோ? இருக்கலாம் நண்பா! எனினும் என் சோகங்களை பகிர்ந்து கொண்ட நீ என் சுகங்களையும் சுகிக்க வேண்டாவா?

நல்லது நண்பா! தற்போது உன் கல்வி, கவிதை, கலை, காதல், கனவுகள் ஆகியனவெல்லாம் எப்படி இருக்கின்றன? உனது கவிதைத் தொகுப்புக்கு நிச்சயமாக ஒரு நல்ல முன்னுரையை, கூடிய விரைவில் எழுதி அனுப்புகிறேன். தம்பி கார்த்தி எப்படி படிக்கிறான்? அப்பா, அம்மா எப்படி இருக்கிறார்கள்? நண்பர் ஹரி எப்படி இருக்கிறார்? இவர்கள் அனைவருக்கும் என் அன்பையும் நல விசாரிப்பையும் தெரிவி. மற்றபடி உனது மற்றும் நமது நண்பர்கள் எப்படி இருக்கிறார்கள்? அனைவருக்கும் என் அன்பைத் தெரிவி.

'மெர்க்குரிப் பூக்கள்' படித்தேன். பாலகுமாரன் தன்னை ஒரு பெண் வயப்பட்ட கபடதாரி என்பதை நிரூபித்துவிட்டான். நேரில் பேசலாம். முழுக்க முழுக்க நமக்கு ஒத்து வராத பாத்திரப் படைப்புகள் . நேரில் பேசலாம் . இனிமேல் யாராவது (எவளாவது) பாலகுமாரனைப் பற்றி பெருமையாகப் பேசினால் சும்மா விடாதே .

வேறு விசேஷமில்லை .

அன்புடன்,
ரமேஷ் சண்முகம்

Wednesday, August 25, 2010

Read Bharathi Kavithaigal with songs and translation!மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்!

Sunday, August 22, 2010

நண்பனின் கடிதங்கள்

ரமேஷ் சண்முகம் –


என் கல்லூரிக்காலம் தொடங்கி இன்றும் தொடரும் சகம்.

சுயம் நேசிக்கக் கற்றுத் தந்தவன்.
கவிதையும் இலக்கியமும்
'பாலின் தெளி நீராய்' பகுத்தாய வகுத்தவன்.
நடுவே நிலைகொண்டிருக்கும்
காலமும் இடமும்
கவிதைகள் கடிதங்கள் வழியே
கடந்து சென்ற பற்பல நினைவுகளில் இருந்து...


 
கடிதம் - 1

04 /11 /1989

பிரிய சரவணா,

உன் கடிதம் கிடைத்தது. எதிர்பார்த்திருந்த ஓர் ஆனந்தத்தின் கொந்தளிப்பை கொஞ்சம் அதிகமாகவே அனுபவித்தேன். மிக்க நன்றி. 'எதற்கடா மடையா? இதற்குப் போய் நன்றி?' என்கிறாயா? நிஜ நேச பரிமாறலுக்கு விலை மதிப்பதோ அன்றி சம்பிரதாய பாராட்டல்களோ ஏற்புடையதன்று எனினும், ஏமாற்றத் தொடர்வுகளின் மத்தியில் எதிர்பார்த்த நிஜம் தொட, நண்பா! என் ஜீவா சிலிர்ப்பின் வெளிப்பாடு இதில் மட்டுமே சாத்தியமாகிறது. மிக்க நன்றி, நண்பா! நன்றி.


உன் கவிதை படித்தேன். நீ சொல்ல விழைந்த அத்தனை குழப்பங்களும் தெளிவாய் புரிந்தது. இக்குழப்பம் நம் கொள்கைகளின் முரண். ஆனால் யதார்த்தத்தின் நிர்ப்பந்தம். நாம் இருவருமே இதன் கைதிகள். நம் சிந்தனையின் வேகத்திற்குச் சூழல் பயணிக்க இயலாது; அன்றி விழையாதிருக்கலாம். இதற்குத் தீர்வுகளாய் நான் கருதுவது, நம் சிந்தனையின் வேகத்தை கட்டுப்படுத்துவது அல்லது சூழலை நம் வேகத்திற்கு பயணிக்கச் செய்வது. இரண்டுமல்லையேல் சூழலை மறுத்து நம் சிந்தனையின் வேகத்தில் பறப்பது. இதில் முதலாவது தீர்வு முற்றிலும் அசாத்தியம். இரண்டாவது மிகவும் கடினம் மற்றும் வெகுபல காரணிகளை பொறுத்தது. மூன்றாவது, நான் மிகவும் விரும்புவது (நீயும் விரும்பலாம்). இதன் சாத்தியக் கூறுகளை நாம் தெளிவாக பகுத்தாய்ந்து விவாதிக்க வேண்டும். அதை நேரில் செய்யலாம்.

இவ்விடம் என் வாழ்க்கை மிகச் சுலபமாக இருக்கிறது. சரவணா! யாருக்கும் கட்டுப்பட வேண்டாத சூழல். அப்பா அம்மாவின் அருகண்மை. சுலபமான உறவுகள். புரிய முற்படாத, (அதனால் தவறான புரிவுகளுக்குச் சந்தர்ப்பமில்லாத) நம்மை நாமாகவே பார்க்கிற நண்பர்கள். அவர்களுடனான அளவளாவுதல்கள். மரங்களடர்ந்து இருள் கவிந்து கிடக்கும் ஊருக்கு வெளியே போகும் சாலைகளில், சாரல் சப்தத்தூடே மாட்டு வண்டிகளும், கதிரறுத்துக் களைத்தும் சலசலத்து வரும் நாட்டுப்புறப் பெண்களும்,புதிய உற்சாகத்துடன் கிளர்ந்து வர, நண்பா! இந்த இயற்கைக்கு எப்படி நன்றி பயப்பது, என் நிஜத் தோழர்களுக்கு இந்த நிஜத்தை எப்போது பரிசளிப்பது? என் காதலிக்கு இதை பரிசமாய் கொடுப்பது எப்போது?

இயற்கையின் வினோதங்கள் என்னை ஏளனமாய் பார்க்கிறது. நானோ பிரமிப்பில் சக மனிதர்களை ஏளனமாய்ப் பார்க்கிறேன்.

இக்குளிரும் பணியும் எத்தனைக் காலம்? குளிர் தாண்டி கோடை வருமே? கோடை போக குளிர் வருமே? எது நித்தியம்? இது எல்லாமே நித்தியந்தான். இச்சுழற்சி நிச்சயம். சுழல்வுடன் நாமும் சுழல நம் இருப்பும் நித்தியம். இக்கணம் இதோடு சாவதாயினும் அடுத்த கணம் இல்லாமல் போகாது.

நாளை என்பது இன்றின் கர்ப்பம். இன்று - நேற்றின் சமாதி. நாளை மற்றுமொரு இன்றே. இதில் நித்தியமில்லை என்று சொல்ல முடியாது. It is not transient , but periodic . so is our life . வாழ்வை ஒவ்வொரு கட்டமாய் கடந்து போவோம். காலத்துடன் நாமும் போக, கட்டங் கட்டமாய் களித்துச் சிலிர்த்து கால முடிவில் காத்திராமல் காணாமர்ப் போவோம்; காலமாகிப் போவோம்.

ஒவ்வொரு விஷயமும் ஏதாவது மற்றொரு விஷயத்தை பொறுத்தே வரையறுக்கப் படுகிறது. இத் தொடர்பின் புரிதலே வாழ்க்கையை ஜெயித்தல். வாழ்வும் இவ்விதமே. சமூகம் என்று நம்மை பெரும்பாடு படுத்தும் காரணியின் அதிமூலம் இதுவே. நமது வாழ்வு; வாழ்வின் ஒவ்வொரு செய்கையும் சமூகம் என்ற பிற ஒரு காரணியை பொறுத்தே மதிப்பிடப்படுகிறது. இதைப் புரிந்து ஜெயிக்க முற்படுகையில் சாதாரண மனிதம் தென்படுகிறது. இதைப் புரிந்து பொருட்படுத்தாமல் போகையில் நம் சிந்தனை ஜெயிக்கிறது.

எங்கோ ஆரம்பித்து வேறெங்கோ போய் விட்டேன் போல் படுகிறதா? நண்பா, இல்லை நம் நித்தியத் தேடலில் சற்றாழமாய் சிந்தித்து விட்டேன். நீயும் சிந்தியேன். சிந்திப்பாய் - நான் சொல்லா விட்டாலும்.

மற்றபடி, க.நா.சு. கட்டுரைகள் கொஞ்சம் சுவையாகவும் கொஞ்சம் வரண்டதாகவும் இருக்கிறது. மேலும் நண்பர்களுடன் ஊர் சுற்றி அரட்டை அடிக்கவே நேரமில்லாதிருப்பதால் அதைச் சரியாகப் படிக்க முடியவில்லை. சென்ற வாரம் கமல் ஹாசனின் "மய்யம்" வார இதழ் படித்தேன். அதில் ஒரு கவிதை. ரொம்ப ரொம்ப டாப் மாப்பிளே. எழுதுன கம்மனாட்டி யார் தெரியுமா? கமலேதான். அப்படியே பிரம்மராஜன் ஞானக்கூத்தன் trend . அசந்துட்டேன் மாப்பிளே. வாரா வாரம் எழுதுறானாம். ரொம்ப டாப். படிச்சு பார். நாம குமுதத்துக்கு எழுதலாம்னு நெனச்ச கடித்தத இவனுக்கே எழுதலாம் போல இருக்கு. நேரில் பேசலாம் நெறைய.

தம்பியை கொஞ்சம் நன்றாக படிக்கச் சொல். அறிவாளிக்கு அனுபவ அறிவைவிட கேள்வி அறிவே ரொம்பப் பயன் தரும். அவனிடம் நிறையப் பேசு. ஒரு வழிக்குக் கொண்டு வா. இது ரொம்ப ரொம்ப மோசமான stage . பையனை உருப்படி தேற்று.

இங்கு ஜெகன், பகவதி இருவருமே இல்லை. ஜெகன் மெட்ராசுக்கு வந்து விட்டான். பகவதி மதுரைக்கு போய்விட்டான். நான் மட்டும் உள்ளுக்குள் - தனியனாய். என் உலகம் நினைப்பதை ஒரு நிர்பந்தத்தில் மறுத்து, இவ்வுலகம் பார்த்துச் சிரித்து அதனூடேயே மிகச் சுலபமாய், சில சமயம் சுவராசியமாயும், சில சமயம் கட்டாயத்திற்காயும் வாழ்ந்து வருகிறேன். இரண்டு மூன்று கவிதைகள் எழுதினேன்.

பொழுது போகிறது. பொழுதுடனே நானும் போகிறேன்.

மற்றபடி நண்பர் ஹரி, கார்த்தி, விஜி, அப்பா, அம்மா ஆகியோருக்கு என் அன்பைத் தெரிவி. நான் convocation இக்கு முதல் இரு தினங்களில் சென்னை வந்துவிட்டு உடனடியாக திரும்பி விடுவேன். மற்றபடி வேறு விசேஷமில்லை.

உடனடியாக பதில் போட்டால் மகிழ்வேன்.

அன்புடன்,
ரமேஷ்

Pandit Venkatesh Kumar and Raag Hameer